தொகுப்பு

Archive for 2010-08-13

பெருகிவரும் பூவரசிகள்!

தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):-

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

By: கீதா சாம்பசிவம்

சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.

Poovarasi, the child killerவேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.

இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?

Congress MLC Jyoti Devi breaking flower pots outside the Bihar Assemblyமேலும் லஞ்சம் வாங்குவதிலும் பெண்கள் நாங்கள் ஒருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டு வருகின்றனர். சில மாதங்கள் முன்னால் பாஸ்போர்ட் அதிகாரியான பெண்மணி ஒருவரின் லஞ்ச ஊழல் வெளிவந்தது. மேலும் காவல் துறையில் இருக்கும் சில பெண்களும் லஞ்சம் வாங்குவதாயும் வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்கும் பெண்மணிகள் இருப்பதாயும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மருந்துகள் வழங்கும் மருத்துவத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. பிஹாரில் காங்கிரஸ் மேலவை உறுப்பினரான ஜோதி தேவி என்ற பெண்மணி சட்டசபை நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை எல்லாம் உடைத்துப் போட்டு அமர்க்களம் செய்தார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இந்த அநாகரிகமான, பெண்மைக்குச் சற்றும் பொருந்தாத, ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி காட்டப் பட்டது. என் கணவரோடு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கூச்சமாய் இருந்தது. இது மட்டுமா?

பெண்களுக்கு உரிமைகள் இல்லை என்றும் அவர்களை அடிமைகள் என்றும் சொல்லிக் கொண்டு பெண்ணியவாதிகள் எதற்கெடுத்தாலும் கொடிதூக்கிக் கொண்டு அலைகின்றனர். சமீபத்தில் ஷர்மிளா தாகூர், பிருந்தா காரத், ஜெயந்தி நடராஜன், ஷபனா ஆஸ்மி போன்றோர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்காக நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்; தினசரிகளில் செய்தியாக வந்தது. இப்படி எல்லாம் இருக்கும்போது பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் அடிமையாக நடத்தப்படுகிறாள் என்றும் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் முழங்குவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை. சம உரிமை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும்போதே இப்படி எல்லாம் நடந்துகொள்ளும் பெண்கள் சம உரிமை கொடுத்துவிட்டால்– அதாவது அவர்கள் கேட்பதெல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்துவிட்டால்– இப்படி எல்லாம் நடக்காதா?

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. சமீப காலங்களில் கிட்டத்தட்ட இந்தக் கள்ளக்காதல் பிரச்சினைகளால் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அநேகமாய்ப் பெண்களே குற்றவாளிகள். ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை?? பெண்ணிய வாதிகளும் இப்படிப் பட்ட பெண்களைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை. உடல் ரீதியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் ஆணும் பெண்ணும் மாறுபடுவது இயற்கை. ஆனால் அதற்காக ஒரு பெண் என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பது அருவருப்பாய் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தெல்லாம் பார்க்கவே வேண்டாம்.

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான். ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில் பெண்களை மட்டமாய்ச் சித்திரிப்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் கணவன் அல்லது மனைவிக்கு ஒரு கள்ளக் காதல், அதற்காகப் பழிவாங்குவது, அல்லது மாமியாரைப் பழிவாங்குவது, மாமியாரையோ, கணவனையோ பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தான் வாழ வந்த குடும்பம் என்ற எண்ணமே இல்லாமல் பழி தீர்த்துக்கொள்ளுவது…. அத்தகைய பெண்களைத் திறமைசாலிகளாய்க் காட்டுவது. அவர்களால் கஷ்டப் படும் பெண்களைத் திறமையற்றவர்களாய் வாயில்லாப் பூச்சிகளாய், பயந்தவர்களாய்க் காட்டுவது. ஒரு நாள் பூராவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப் படுகிறாள். அவளுக்குத் தன் நிலைமையை நினைத்துத் தன்னிரக்கம் ஏற்படுகிறது. தான் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணுகிறாள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் உடுத்தும் உடைகள், அணியும் ஆபரணங்கள் இந்தப் பெண்களின் கருத்தையும், கவனத்தையும் கவருகின்றன. ஆனால் சராசரிப் பெண்களால் வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவற்றின் விலைகள். ஆகவே பெண்களுக்குத் தேவை பணம், அதனால் வரும் ஆடம்பர வாழ்வு. அதற்காகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் தயங்கவில்லை அவர்கள்.

மேலும் இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவரும் அநேகமாய் வேலைக்குச் செல்கிறார்கள். மனைவிக்கு அலுவலகம் இருக்கும்போது கணவனுக்கு இருக்காது. கணவன் அலுவலகம் சென்றால் மனைவி வீட்டில் இருப்பாள். ஆக, பெண்களுக்கு முதல் எதிரி இந்தத் தனிமையே. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் என்றால் நாள் முழுதும் தொலைக்காட்சித் தொடர்களே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. அதிலோ பெண்கள் தைரியமாய் என்னவெல்லாம் செய்கிறார்கள்? தனிமையில் வாடும் பெண்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்லவும், தங்கள் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கவும் யாரானும் இருக்க மாட்டார்களா என உள்ளூர ஏங்குகிறார்கள் என்பது சில உளவியல் நிபுணர்களின் கருத்து. அதனால்தான் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து. முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த போது இந்தப் பிரச்சினை அதிகம் எழவில்லை. அன்பைத் தேடி ஏங்குவதும் தனிமை தரும் சுதந்திரமும் காரணங்களாய்ச் சொல்கிறார்கள். நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது? விசித்திரமாய் இல்லை? ஏன் அவர்கள் கணவன்மார்களிடம் மனம் விட்டுப் பேசி, இதைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பெற்ற பெண்கள் என்றால் ஏன் குழந்தைகளோடு பொழுது போக்கக் கூடாது? ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளையும் இன்று தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் பெருமளவில் பாதித்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். இப்போது பெண்களின் இந்த நிலைமைக்குத் தீர்வு என்னவென்று யோசிக்கலாம்…

நன்றி: தமிழ் ஹிந்து மற்றும் திருமதி. கீதா சாம்பசிவம்